புலிகள் ஊடுறுவலை தடுக்க பலத்த கண்காணிப்பில் இந்திய கடல் பகுதி
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான யுத்தம் உக்கிரமடைந்துள்ளது. தினசரி பலர் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவிடாமல் தடுக்க கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி, வேதாரண்யம் ஆகிய கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிறிய தீவுகளில் தீவிர கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தமிழகத்திலிருந்து வெடி பொருட்கள் மற்றும் மருந்துகளை கடத்த விடுதலைப் புலிகள் முயலலாம். எனவே இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கை மிக அருகில் இருப்பதால் மண்டபம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர வழக்கமான வான்வழி ரோந்து, கடல்வழி ரோந்து ஆகியவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் நடவடிக்கைகளும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்புப் பணியில், இந்திய கடலோர காவற்படையின் 2 கப்பல்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.