நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ஏ.ஏல்.சுப்ரமணியனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த ஏ.எல்.சுப்ரமணியன் இருக்கிறார். நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை ஒரு கடிதம் வந்தது
அதில் நெல்லை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேயர் சுப்ரமணியனை குண்டு வீசி கொலை செய்யப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நெல்லை சரக டிஐஜி கண்ணப்பனுக்குத் தகவல் கொடுத்தார் மேயர் சுப்ரமணியன். இதையடுத்து மேயருக்கான பாதுகாப்பை அதிகரிக்க டிஐஜி உத்தரவிட்டார். அதன்படி மேயரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நெல்லை மாநகராட்சியின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.