நான் இறந்தால் முஷாரப்பே பொறுப்பு: பெனாசிர் 'இ-மெயில்'

Subscribe to Oneindia Tamil

Benazir Bhutto
வாஷிங்டன்: நான் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணமாக இருக்க முடியும். பாதுகாப்பற்ற நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளார் முஷாரப் என்று மரணத்திற்கு முன்பு பெனாசிர் பூட்டோ அனுப்பிய இமெயில் தகவல் வெளியாகியுள்ளது.

ரால்பிண்டியில் நேற்று நடந்த பயங்கர தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பிய பின்னர் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி பூட்டோ அனுப்பிய ஒரு இ மெயில் வெளியாகியுள்ளது.

இந்த இ மெயிலில் தான் ஒருவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

இந்த இ மெயிலை தனது அமெரிக்க செய்தித் தொடர்பாளரும், ஆலோசகருமான மார்க் சீகலுக்கு அனுப்பியுள்ளார் பெனாசிர். அந்த மெயிலில் நான் பாகிஸ்தானில் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணம் என பெனாசிர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு எனக்கு கூடுதல் பாதுகாப்பு தருமாறு நான் கோரியும் கூட முஷாரப் அரசு அதை ஏற்கவில்லை. இதுவரை எனது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எது நடந்தாலும் கடவுள் விருப்பப்படியே நடக்கட்டும்.

எனக்கு எது நடந்தாலும் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார். அவரது ஆட்சியில் நான் மிகவும் பாதுகாப்பற்றவளாக ஆகியுள்ளேன். எப்போதும் பயத்துனேடேய வாழும் நிலைக்கு முஷாரப் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

பெனாசிரின் இந்த இமெயிலை சீகல், சிஎன்என் தொலைக்காட்சியின் உல்ப் பிளிட்சருக்கு அனுப்பி வைத்திருந்தார். பூட்டோ கொல்லப்பட்டால் மட்டுமே இந்த மெயிலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதாக சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் பெனாசிர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசில் மிகவும் உயரிய பதவியில் இருக்கும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போது பெனாசிர் கூறியிருந்தார். மேலும் தனது இந்த பயத்தை வெளிப்படுத்தி முஷாரப்புக்கும் கடிதம் எழுதியிருந்தார் பெனாசிர்.

தற்போது சீகலுக்கு அனுப்பிய மெயிலில், முஷாரப்தான் தனது கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பெனாசிர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அல் கொய்தா, கராச்சியைச் ேசர்ந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாத அமைப்பு ஆகியவற்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பெனாசிர் முன்பே கூறியிருந்தார்.

அக்டோபர் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பிறகு தனக்கு கவச பாதுகாப்பு வாகனங்கள், செல்போன் ஜாமர் கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள், தனியார் பாதுகாவலர்கள் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி முஷாரப்புக்கு பெனாசிர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பிக்கள் மூன்று பேரும் முஷாரப்புக்குக் கடிதம் எழுதியிருந்தனர் என்ர தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பெனாசிருக்கு இருந்து வந்த மிரட்டல் குறித்து முஷாரப் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சீகல் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கராச்சிக்கு அவர் வந்தபோது ஏற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி குறித்து முஷாரப் அரசு சரிவர விசாரணை நடத்தவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பெனாசிர் கோரினார். அதையும் முஷாரப் ஏற்கவில்லை.

செல்போன் குண்டுகளை தடுக்கும் வகையில், தனக்கு செல்போன் ஜாமர் வாகனம் தரப்பட வேண்டும் என்று பெனாசிர் கோரியிருந்தார். அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியுமும் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குரிய பாதுகாப்பை முஷாரப் அரசு தரவில்ைல என்ற ஆதங்கமும் பெனாசிரிடம் இருந்தது. ஆனால் எந்தவித அடிப்படைப் பாதுகாப்பும் பெனாசிருக்குத் தரப்படவில்லை. சாதாரண போலீஸ் பாதுகாப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் சீகல்.

சி.என்.என். தொலைக்காட்சியைச் சேர்ந்த டான் ரிவர்ஸ் கூறுகையில், பெனாசிர் கராச்சிக்குத் திரும்பியபோதுஅந்த செய்தியை நாங்கள் சேகரித்தபோது, பாதுகாப்பு குளறுபடிகளை நேரில் காண முடிந்தது. பெனாசிர் இருந்த வாகனத்திற்கு மிக அருகே நாங்கள் செல்ல முடிந்தது. எங்களை யாரும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சீகல் தொடர்ந்து கூறுகையில், அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக் கொள்ள காவல்துறை பெனாசிருக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார். எப்போதும் மக்களுடனேயே இருப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் பெனாசிர். மக்களிடைேய நெருக்கமாக இருக்கவே அவர் விரும்பினார். நடந்த குற்றத்திற்கு பெனாசிர் எந்த வகையிலும் காரணமில்லை.

பெனாசிரையும், தேர்தலில் போட்டியிடும் பிற வேட்பாளர்களையும் காக்க வேண்டியது முஷாரப் அரசின் கடமையாகும்.

பெனாசிர் எப்போதும் ஜன சமுத்திரத்தின் மத்தியில்தான் இருந்தார். அதை ஜனநாயகத்ைத விரும்பும் எந்த அரசியல் தலைவராலும் தவிர்க்க முடியாது என்றார் சீகல்.
பாக். தூதர் மறுப்பு

இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது அலி துரானி இதை மறுத்துள்ளார். பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

முஷாரப்பையும் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள்தான், பெனாசிரையும் குறி வைத்துள்ளனர். தீவிரவாதிகள்தான் பெனாசிர் படுகொலைக்குக் காரணம்.

பெனாசிருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவையோ அனைத்தும் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கராச்சிக்கு வந்தபோது பெருமளவிலான போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அப்போது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது அவர் பாதுகாப்புப் படையினர் அதிகம் இருந்ததால் உயிர் தப்பினார். இல்லாவிட்டால் அப்போதே அவர் உயிரிழந்திருக்கக் கூடும்.

தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கவும் பெனாசிர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் கூடவே இருந்து வந்தனர்.

பெனாசிர் பாதுகாப்புக்காக 8000 பாதுகாவலர்கள் வரை நியமிக்கப்பட்ுட அவருடேனேயே இருந்து வந்தனர். உலகில் யாருக்குமே இப்படி ஒரு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை.

அவர் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டும். வெடிகுண்டு வைத்தோ அல்லது வாகனத்தை தகர்த்தோ கொல்லப்படவில்லை. நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த புகார்கள் எல்லாம் சரியல்ல என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+