இலங்கையில் இருந்து வாரந்தோறும் 250 அகதிகள் வருகை
கடையநல்லூர்: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வாரந்தோறும் 200 முதல் 250 அகதிகள் வந்து கொண்டுள்ளதாக அகதிகள் மறுவாழ்வு துறை துணை ஆட்சியர் டேவிட் பிரபுகுமார் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் அருகேயுள்ள அகதிகள் முகாமை டேவிட் பார்வையிட்டார். அவரிடம் அகதிகள், முகாமில் நிலவி வரும் மின் தட்டுபாடு, குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விளக்கினர்.
பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த மாதம் கடையநல்லூர் அகதிகள் முகாமை ஆய்வு செய்த மறுவாழ்வு துறை ஆணையர் இந்த முகாமில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசிற்கு மதிப்பீடு அனுப்பியுள்ளார். அதற்கான நிதியை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.
எனவே இந்த அகதிகள் முகாமில் இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். தமிழகத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு வரை 17,000 அகதிகள் வந்துள்ளனர். தற்போது சராசரியாக வாரத்திற்கு 200 முதல் 250 வரை இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றனர்.
அவர்கள் மறுவாழ்விற்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. இந்தியாவிலேயே அதிநவீன அகதிகள் மறுவாழ்வு மையம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் டேவிட்.












Click it and Unblock the Notifications