ராமர் பாலத்தைக் காக்கக் கோரி நாளை டெல்லியில் பேரணி
டெல்லி: டெல்லியில் நாளை ராமர் பால பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள பேரணியையொட்டி டெல்லி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படடுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ராமர் பால பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ராமர் பாலத்தை காக்கக் கோரி நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் நாளை டெல்லியில் பேரணி நடத்தவுள்ளனர்.
வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இதையொட்டி டெல்லி நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக டெல்லி நகரில் உள்ள மூன்று முக்கிய ரயில் நிலையங்களான புதுடெல்லி, பழைய டெல்லி மற்றும் நிஜாமுதீன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகர்பா செளக்கிலிருந்து பீர்கார்கி செளக் வரையிலும் உள்ள வெளிப்புற வட்டச் சாலை மற்றும் தெளலா கான் முதல் வசிர்பூர், மதுரா சாலை, தேசிய நெடுஞ்சாலை 8, தேசிய நெடுஞ்சாலை 24, ஜிடி சாலை ஆகியவற்றை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காலை 7 மணி முதல் 11 மணி வரை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும் ரோகினி பகுதியில் உள்ள ஜப்பான் பூங்கா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications