'எழுச்சி'க்குத் தயாராகும் சரத் கட்சி!

மதுரை: சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது அரசியல் எழுச்சி மாநாடு பிப்ரவரி 10ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக சரத் கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசியல் களத்தை உலுக்க தயாராகி வருகிறார்கள்.
திமுகவிலிருந்தும், பின்னர் அதிமுகவிலிருந்தும் விலகிய சரத்குமார், சில கால அமைதிக்குப் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி சென்னையில் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
இந்த நிலையில் முதல் முறையாக அரசியல் எழுச்சி மாநாட்டை சரத்குமார் நடத்தவுள்ளார். இதற்காக தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரான மதுரையைத் தேர்வு செய்துள்ளார். பல அரசியல் புரட்சிகளுக்கு வித்திட்ட ஊர் மதுரை என்பதால், சரத் கட்சியினரும், இந்த மாநாட்டைத் தொடர்ந்து கட்சிக்கு புதுத் தெம்பு, புத்துயிர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாநாட்டுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
மாநாட்டுக்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் தற்போது சுவர் விளம்பரங்களை எழுதுவது, போஸ்டர்கள் ஒட்டுவது, தட்டிகள் வைப்பது ஆகிய பணிகளில் சரத் கட்சியினர் இறங்கியுள்ளனர்.
இதுதவிர கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையிலும், மாநாட்டின் நோக்கத்தை விளக்கும் வகையிலும் ஆடியோ கேசட்டுகள் தயாரிக்கப்படவுள்ளன. அது மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும்.
மதுரை மேலூர் சாலையில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சரத் கட்சியினர் கூறுகிறார்கள்.
மாநாட்டையொட்டி பிரமாண்டப் பேரணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியில் தொண்டர்களின் அணிவகுப்பு மட்டும் இடம் பெறாமல் பல்வேறு கலைக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மாநாட்டுப் பந்தலை வடிவமைக்கும் யோசனையும் உள்ளது. இதற்காக திரைப்பட கலை இயக்குநர்களிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்படவுள்ளது.
மாநாட்டுப் பந்தல் முதல் கொடிக் கம்பம் வரை அனைத்திலும் புதுமை இருக்க வேண்டும் என சரத்குமார் அறிவுறுத்தியுள்ளாராம்.
தற்போது 1977 படத்தின் ஷூட்டிங்குக்காக மலேசியாவில் இருக்கிறார் சரத்குமார். விரைவில் அவர் சென்னை திரும்புகிறார். அதன் பின்னர் மாநாட்டுப் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது.
கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக நடைபெறும் அரசியல் மாநாடு என்பதால் சரத் கட்சியினர் மத்தியில் பெரும் ஆர்வமும், உற்சாகமும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications