For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் காங்கிரஸில் கருணாகரன்

By Staff
Google Oneindia Tamil News

Karunakaran

டெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டு தோல்வி அடைந்த முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன், நேற்று சோனியா காந்தியை சந்தித்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார்.

90 வயதாகும் கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதியான கருணாகரன் 2005ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

ஆனால் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகிய கருணாகரன், அதே ஆண்டு மே 1ம் தேதி ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற புதுக் கட்சியைத் தொடங்கினார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில், கருணாகரனும், அவரது மகன் முரளீதரனும் இணைந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப விரும்பிய கருணாகரன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களுடனும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடனும் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். கருணாகரன் திரும்ப யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து கருணாகரன் மீண்டும் காங்கிரஸில் சேர கட்சி மேலிடம் பச்சைக் கொடி காட்டியது.

இதையடுத்து நேற்று டெல்லி வந்த கருணாகரன், சோனியா காந்தியை சந்தித்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார்.

அவர் காங்கிரஸில் சேர்ந்தது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த அரை மணி நேர சந்திப்புக்குப் பின்னர் கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்திகரமான சந்திப்பு இது. எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கட்சிக்குத் திரும்பியுள்ளேன்.

பதவி எதையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை. எனக்கு கட்சி மேலிடம் என்ன பொறுப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்று செயல்படுவேன்.

எனது மகன் முரளீதரனும் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். வர மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸை விட்டு நீண்ட காலத்திற்கு அவரால் விலகியிருக்க முடியாது என்றார் கருணாகரன்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாகரன் சந்தித்துப் பேசினார்.

கருணாகரன், காங்கிரஸுக்குத் திரும்பி விட்டாலும், கூட அவரது மகனும், கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முரளீதரன், காங்கிரஸ் கட்சிக்கு வர மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X