புத்தாண்டை வரவேற்க சென்னை தயார்
சென்னை: 2008ம் ஆண்டை வரவேற்க சென்னை மாநகரம் தடபுடலாக தயாராகியுள்ளது. பாதுகாப்பான கொண்டாட்டத்தை உறுதி செய்ய காவல்துறையும் சகல ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது.
2007ம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. 2008ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ரெடியாகியுள்ளன
தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு அனைத்து மாநகரங்களும் தயாராக உள்ளன.
சென்னை நகரில் வழக்கம் போல இந்த ஆண்டும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்களில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவில்கள், கிறிஸ்தவ பேராலயங்கள், மசூதிகளிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் இன்று நள்ளிரவு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நடனம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உல்லாச விருந்தகுள் என தடபுடலான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.
லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் பிரேசில் மற்றும் ஹாலந்திலிருந்து வந்துள்ள நடனக் குழுவினர் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
தாஜ் பிஷர்மேன் கேவ் ஹோட்டலில், அராபிய இரவுகள் என்ற பெயரில் பெல்லி நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாட இப்போதிருந்தே மக்கள் கூட ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவில் அவர்கள் ஹேப்பி நியூ இயர் என போடப் போகும் கூச்சலைக் கண்டு அலற கடலும் தயாராக உள்ளது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது காவல்துறை.
5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முக்கிய இடங்களில் சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 2ம் தேதி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications