பெனாசிருக்கு அயர்லாந்து அமைதி விருது
லண்டன்: பெனாசிர் பூட்டோவுக்கு அயர்லாந்து நாட்டின் 2007ம் ஆண்டுக்கான டிப்பரேரி அமைதி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்ட பாடுபட்டதற்காகவும், நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டதற்காகவும் பெனாசிர் பூட்டோவுக்கு அமைதிக்கான இந்த விருது மரணத்திற்குப் பின்பு வழங்கப்படுவதாக விருது அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விருதினை அயர்லாந்தின் டிப்பரேரி அமைதி விருதுக் கழகம் வழங்குகிறது. ஏப்ரல் மாதம் இந்த விருது வழங்கப்படும். பெனாசிர் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதியிடம் விருது அளிக்கப்படும்.
இதுகுறித்து விருதுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்டின் க்யுன் கூறுகையில், பூட்டோ மிகவும் துணிச்சலானவர், தைரியமானவர். அசாத்திய திறமை படைத்தவர்.
தேர்தலை சந்திக்க, தனது கட்சிக்குத் தலைமை தாங்க அவர் மீண்டும் தாயகம் திரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்று தெரிவித்தார்.
இந்த விருதுக்காக ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சர் இயான்பெய்ஸ்லி, முன்னாள் நோபல் பரிசாளர் ஷிரின் இபாடி, இந்திய ஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
1984ம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. உலக அளவில் அமைதிக்காக பாடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதினை தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி ஆகியோர் பெற்றுள்ளனர்.