வைஷ்ணவா கல்லூரியில் வெடிகுண்டு புரளி
சென்னை: சென்னையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் இன்று வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, அரும்பாக்கத்தில் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி உள்ளது. இன்று காலையில் அந்த கல்லூரிக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
பேசிய மர்ம நபர் கல்லூரிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டான்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து கல்லூரி மற்றும் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கடைசியில் வெறும் புரளி என தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டு புரளியால் வைஷ்ணவா கல்லூரிக்கும், பள்ளிக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
லேடி ஆண்டாள் பள்ளிக்கும்....:
இதேபோல, சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு தொலைபேசியில் பேசிய ஒரு மர்ம நபர், பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பள்ளிக் கூடம் முழுவதும் சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி எனத் தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டு புரளியால் பள்ளியில் பரபரப்பு நிலவியது.