பெண் என்ஜீனியர் மர்ம சாவு: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் லாட்ஜில் மர்மமான முறையில் இறந்த பெண் என்ஜீனியர் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் நீலமேகம் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,
தஞ்சாவூரில் உள்ள டெம்பிள் டவர் ஹோட்டலில் 2007 நவம்பர் 19ம் தேதி அகிலா என்ற பெண் என்ஜீனியரை, சேதுமணி மாதவன் என்ற இன்ஸ்பெக்டர் சட்ட விரோதமாக அடைத்து வைத்தார். அப்போது அகிலா மர்மமான முறையில் இறந்து விட்டார்.
அப்பெண், இறந்த உடனேயே தஞ்சாவூர் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அதற்கு மாறாக அப்பெண்ணின் பெற்றோர் வரும் வரை காத்திருந்துப் பதிவு செய்துள்ளனர்.
அகிலாவின் மரணம் குறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பிய பிறகே இன்ஸ்பெக்டருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்.பியும், டி.எஸ்.பியும், இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனை காப்பாற்றும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், பெண்ணின் பெற்றோரை மிரட்டியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் காவல் துறையில் தனக்குள்ள செல்வாக்கால், அவருடன் சேர்ந்து எஸ்.பி, டி.எஸ்.பியும் கூட்டாக செயல்படுகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுடன் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று இறந்த அகிலாவின் மாமா மகேந்திரவர்மனும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்துள்ளார்.
ஆனால் அகிலாவின் தந்தை இவ் வழக்கில் டி.எஸ்.பி விசாரணையே போதுமானது. வழக்கு விசாரணையை வேறு ஏஜென்சிக்கு மாற்றக் கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி குலசேகரன், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இவ் வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணை முடிவு, தடய அறிவியல் துறை முடிவு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.
அகிலாவை இன்ஸ்பெக்டர் செக்ஸ் ரீதியில் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications