சரத் கட்சி மாநாடு-பந்தலுக்கு ராதிகா அடிக்கல்
மதுரை: சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது அரசியல் எழுச்சி மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணியை இன்று அடிக்கல் நாட்டி சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
திமுகவிலிருந்தும், பின்னர் அதிமுகவிலிருந்தும் விலகிய சரத்குமார், சில கால அமைதிக்குப் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி சென்னையில் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
அக்கட்சியின் முதலாவது அரசியல் எழுச்சி மாநாடு பிப்ரவரி 10ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. மதுரை ரிங் ரோட்டில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா இன்று நடந்தது.
மலேசியாவுக்கு படப்பிடிப்புக்காக சரத்குமார் சென்றுள்ளதால், அவரது மனைவி ராதிகா சரத்குமார் கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பந்தல் காலை ஊன்றி பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் வரும் போது நான் பிரசாரம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
புதிய அரசியல் கட்சி துவங்கியதற்கு வேறு எந்த அரசியல் கட்சியும் பின்னணியில் இல்லை. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதை கட்சித் தலைவர் சரத்குமார் தான் முடிவு செய்வார் என்றார் ராதிகா.
கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக நடைபெறும் அரசியல் மாநாடு என்பதால் சரத் கட்சியினர் மத்தியில் பெரும் ஆர்வமும், உற்சாகமும் காணப்படுகிறது.
தமிழகத்தின் பிரம்மாண்ட கட்சிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ள தேமுதிக, மதுரையில்தான் தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநாட்டையும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மதுரையில் தான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் சென்டிமென்ட் சரத்துக்கு பலிக்குமா. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications