2007: தமிழகத்தில் 11,130 பேர் சாலை விபத்தில் மரணம்
சென்னை: 2007ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 11,130 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவர தகவல் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 54,553 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 11,130 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 6,409 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இதில், 1,096 பேர் இறந்துள்ளனர்.
2007ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை நடந்த சாலை விபத்துகளில், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் வாகனம் ஓட்டியதாக 7,184 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாகவும், 4,969 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுள்ளன.
விபத்துகளுக்கு காரணமான 8,372 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 727 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
இதே போல் 581 போக்குவரத்து கழகப் பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் வாகனம் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 10 முதல் 11 சதவீதம் அதிகரிப்பது தான் காரணம்.
தமிழகத்தில் உள்ள 97 லட்சம் வாகனங்களில் 76 லட்சத்துக்கு மேல் இருசக்கர வாகனங்கள் தான் இருக்கின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அவசர கால விபத்து மீட்பு மையங்கள் மூலம் 10 ஆயிரத்து 868 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.