புலிகளை ஆதரித்தால்...கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சேலம்: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது மத்திய அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழக அரசு நியாய விலையில் சிமென்ட் மூட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கையின் மூலம் ஏழை, எளிய கட்டடத் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என நம்புகிறேன். அந்த வகையில் அரசு எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சொகுசு பேருந்துகள் உட்பட 1094 அரசு பேருந்துகளை புதிதாக இயக்குகிறார்கள். இந்த சொகுசுப் பேருந்துகளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் அவற்றை இயக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை ஏற்க இயலாது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அவர்கள் மீது மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வருவதைப் போன்று ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி மத்திய அரசை எந்த வகையிலும் பாதிக்காது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வழி காட்டுதலின்படி மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.
மக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா பொங்கலன்று விருந்து கொடுக்கவுள்ளார். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டால், அது மதவாத கூட்டணியாகும். மதவாத கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications