நாமக்கல்லில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் அறிமுகம்!
நாமக்கல்: தமிழகத்திலேயே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தாலுக்கா மருத்துவ மனைகள், நகராட்சிகள் என மொத்தம் 27 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம் மையங்கள் மூலம் எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து இல்லாத மலைக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் பரிசோதனை மற்றும் ஆலோசனை மைய வசதியுடன் கூடிய வாகனத்துடன் நடமாடும் எச்.ஐ.வி. ஆய்வக வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஆலோசனைகள், பரிசோதனைக்கு என தனித்தனி அறைகள் உள்ளன. ஒரு கவுன்சிலரும் ஒரு ஆய்வுக் கூட நிபுணரும் இதில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் அரை மணி நேரத்தில் ரத்தப் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் மலைகிராமங்கள் சார்ந்துள்ள ஏனைய மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவு செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.