தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் ஆதரிக்க மாட்டோம்: தா.பாண்டியன்

புதுச்சேரி: தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது, அதில் சேராது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத 3வது அணியை அமைப்போம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜனும் தனித் தனியாக கூறியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கட்சியின் 19வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் அவர் நேற்று இரவு (ஜனவரி 4) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 3வது அணி என்பது, உழைக்கும் வர்க்கத்தினர், ஏழைகள் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பதாக, முதலாளித்துவத்தை எதிர்க்கும் அணியாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் விரோத கொள்கைகளை நீண்ட காலத்திற்குப் பொறுத்துக் கொள்ள முடியாது.
நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு முழு உரிமையும் உள்ளது. தாராளமாக அவர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் வரக் கூடாது.
தமிழக அரசு தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துகிறது. ஆனால் ஏழை விவசாயிகளுக்கும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் இலவச நிலம் கொடுக்க அது நடவடிக்ைக எடுக்கவில்லை.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் என்ற முதல்வரின் அறிவிப்பு இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. அவர்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல வாழ்கிறார்கள். இவர்களுக்கு கிராமப் புறங்களிலாவது தலா 3 சென்ட் நிலம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் வீடு கட்டிக் கொள்வார்கள் என்றார். தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications