கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கத்திரிக்காய் விலை கிலோ ரூ.24 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.. இதனால் மற்ற இடங்களை விட இங்கு விலை மிகவும் மலிவாக இருக்கும்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் காய்கறி செடிகள் நாசமாகிவிட்டன. குறிப்பாக பறிக்கும் தருணத்தில் இருந்த கத்தரிக்காய்கள் பூச்சி அரித்து அதிகம் சொத்தையாகி விட்டன. இதன் உற்பத்தி குறைந்து அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.6க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது கிலோ ரூ.24 ஆக உயர்ந்துவிட்டது. இதுபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பெல்லாரி வெங்காயம் (பெரிய வெங்காயம்) கிலோ ரூ.8-லிருந்து ரூ.12 ஆகவும், மாங்காய் ரூ.15 லிருந்து ரூ.20 ஆகவும், புடலங்காய், சீனி, அவரைக் காய் ரூ.5 லிருந்து ரூ.12 ஆகவும், வெண்டைக்காய் ரூ.2 லிருந்து ரூ.6 ஆகவும், மிளகாய் ரூ.7 லிருந்து ரூ.12 ஆகவும், பாகற்காய் ரூ.10 லிருந்து ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.34க்கு விற்ற வெங்காயம் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.15க்கு விற்கப்படுகிறது.