சிறு வயது முதலே இசை பயில வேண்டும்: ராமதாஸ்
திருநெல்வேலி: இசையை குழந்தை பருவத்தில் இருந்தே காட்டாயமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நடந்த பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நம்மாழ்வார் பாசுர ஆராதனை விழாவில் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
நான் மருத்துவம் பயின்று அரசியலுக்கு வந்த பின் தமிழ் பண்ணிசையை மீட்க வேண்டும் என்று எண்ணுவதற்கு காரணமாக இருந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் கண்ணன். நான் பெரிதும் போற்றுகின்ற இசை ஆய்வறிஞர் மம்முது சொன்னது போல் சங்க காலம் தொட்டு இன்று வரை தமிழிசைக்கு இடையிடையே தொய்வு ஏற்பட்டுள்ளது.
இசையை குழந்தை பருவத்தில் இருந்து கட்டாயமாக கற்று தர வேண்டும் என்று 5 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். இதற்கு ஆதரவும் கூடி வருகிறது. வடகொரியா, மலேசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட இசை கட்டாய பாடமாக இருக்கிறது.
மன அழுத்தத்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோய்கள் வருவதாக கூறுகின்றனர். ஒருவன் இசையை பாடினாலோ, கேட்டாலோ சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் வராது. இசைக்கு தாவரங்கள் வளர்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள்.
நமது நாகஸ்வரம் அருமையான கருவி. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாநிலத்தில் 10, 15 இசைப்பள்ளிகள் இருந்தாலும், நலிவுடன் தான் இருக்கிறது. தமிழிசையை வளர்க்க நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்வோம்.
சென்ற ஆண்டு ராமனுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விழா எடுத்தோம். இங்கு இந்த மாவட்டத்தில் பிறந்த எல்லோருக்கும் விழா எடுக்க வேண்டும் என்று ஆசை. அதை பண்ணிசை தமிழ் மன்றம் நடத்தும்.
மழலை வகுப்பில் இருந்து இசையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பல முறை வைத்த கோரிக்கையை அரசுக்கு மீண்டும் வைக்கிறேன். காலையில் இயற்கை மழை நம்மை வாழ்த்தியது. மாலை வரை இசை மழையில் நனையுங்கள். தமிழ் மக்கள் வாழ்த்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்போடும் இந்த விழாவை நடத்தவில்லை என்றார் அவர்.