படிப்பைத் தொடர லண்டன் திரும்பினார் பிலாவல்
துபாய்: மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தனது படிப்பை தொடர்வதற்காக துபாயில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
2007 டிசம்பர் மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு திரும்பிய போது தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
பெனாசிரின் இறுதிச் சடங்கில் அவருடைய மகன் பிலாவல் பூட்டோ (19), மகள்கள் பக்தாவர் (17), ஆசிபா (14) ஆகியோர் கலந்து கொண்ட பின்னர் கடந்த 1ம் தேதி துபாய் திரும்பினர்.
அங்கு எமிரேட்ஸ் மலைப்பகுதியில் உள்ள பெனாசிரின் வீட்டில் மறைந்த பெனாசிருக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிலாவல் மற்றும் அவரது சகோதரிகளுக்கு ஆறுதல் கூறினர்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பிலாவல் பூட்டோ, தனது செமஸ்டர் தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் தனது படிப்பை தொடர துபாயில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
பெனாசிரின் மறைவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக அவரின் மகன் பிலாவல் பூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications