மதுரையில் 7 விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது
மதுரை: மதுரையில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடிபொருட்கள் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ராமேசுவரம் செல்லும் ரயிலில் வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுரை நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அகதிகள் அதிகம் தங்கியிருக்கும் ஆனையூர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிவராமகிருஷ்ணன் என்பவரை போலீசார்
விசாரித்தனர். அப்போது அவரிடம் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.
அவர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரிந்தது. பின்னர் அழர் கொடுத்த தகவலை வைத்து முதுகுளத்தூரைச் சேர்ந்த செந்தில்வேல், முருகன், முத்துராமலிங்கம், முருகபாடி, சந்திரன் மற்றும் மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த ராஜா ஆகியோரும் சிக்கினர்.
இவர்களிடமிருந்து 5,000க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகளையும், வெடிபொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
7 பேரும் நீண்ட நாட்களாக மதுரையில் இருந்து ரயில் மூலம் ராமேசுவரத்திற்கு வெடிபொருட்களை கடத்தி, பின்னர்
கள்ளப் படகு மூலம் விடுதலைப்புலிகளிடம் அவற்றைக் கொடுத்து வந்தது தெரிய வந்தது.
வெடிபொருட்களை அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள். அவர்களுக்கு யார் சப்ளை செய்தனர் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மதுரையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.