மோடிக்கு கருப்புக் கொடி: தமுமுக
சென்னை: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்றுள்ள பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சென்னைக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமுமுகவின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த ஜவாஹிருல்லா பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்துக்கு அழைத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மோடி வருகிற 16ம் தேதி சென்னைக்கு வருகிறார். அன்றைய தினம் காமராசர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு காமராஜர் அரங்கத்தை காங்கிரஸ் கட்சி வழங்கக் கூடாது.
மோடி நிகழ்ச்சிக்கு வரும்போது காமராஜர் அரங்கத்தை பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் முற்றுகையிட்டு, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம் என்றார் ஜவாஹிருல்லா.