நிமிட்ஸை தாக்கினால் .. ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை
ஜெருசேலம்: அமெரிக்க அணு சக்தி போர் கப்பல் நிமிட்ஸை தாக்கினால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னால் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் நிமிட்ஸ் ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் நாட்டு கடற்படை படகுகள் அந்த கப்பலை வழிமறித்து தங்கள் நாட்டு எல்லைக்குள் செல்வதாக எச்சரிக்கை விடுத்ததுடன், மேலும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ நாங்கள் சர்வதேச கடற்பகுதியில் தான் சென்று கொண்டிருக்கிறோம், இதை தடுக்க ஈரானுக்கு உரிமை கிடையாது எனக் கூறி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.
ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரான் தேவையில்லாமல் எங்கள் கப்பலை மிரட்டி உள்ளது. இதை நாங்கள் பெரிய விஷயமாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் கடற்படையினர் எங்கள் கப்பலை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என்றார் புஷ்.