திருச்சி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு
திருச்சி: மத்திய உள்துறை இணைச் செயலாளர் திணேஷ் சிங் தலைமையிலான மத்திய நிபுணர் குழு திருச்சி மாவட்டத்தில் சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திணேஷ் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை திருச்சிக்கு வந்தது. அவர்களுடன் வந்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் தங்கம் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறஉகையில், திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 108 கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழுவினர் இன்று சென்னை திரும்பி முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தோட்டக் கலைப் பயிர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.