எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ராமாவரம் தோட்டம் செல்லும் ஜெ.!
சென்னைக்கு அருகே, போரூர் செல்லும் வழியில், உள்ள ராமாவரத்தில்தான் எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் உள்ளது. அதிமுகவினரிடையே தோட்டம் என்று இதற்கு செல்லப் பெயர் உண்டு.
அந்த தோட்ட இல்லத்திற்கு ஜெயலலிதா இதுவரை ஒரே ஒருமுறைதான் சென்றுள்ளார். எம்.ஜி.ஆர். இறந்தபோது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அங்கு போனதே இல்லை.
இந் நிலையில் வருகிற 17ம் தேதி எம்.ஜி.ஆரிந் 91வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ராமாவரம் தோட்டத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 91வது பிறந்த நாளாகிய 17.1.2008 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து 91வது பிறந்த நாள் விழா மலரை வெளியிட உள்ளார்.
மருத்துவ அணியின் சார்பில் தலைமை கழக வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலில் கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டினை திறந்து வைக்கிறார்.
அதன் பின் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்ல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜெயலலிதா பரிசுகளை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ராமாவரம் தோட்ட இல்லம் கவனிப்பாரின்றி போய் விட்டது. எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்த அந்த இல்லம் இன்று கவனிப்பாரின்றி கிடக்கிறது.
இதை சீரமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆட்சியில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் பெயரைச் சொல்லி விஜய்காந்த், சரத்குமார் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், விஜய்காந்துக்கு எம்ஜிஆர் அபிமானிகள் இடையே நல்ல ஆதரவும் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் தான் அந்த தோட்டத்திற்கு ஜெயலலிதா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.