ரஜினியின் வாக்கு பலிக்கும்-கருணாநிதி
சிவாஜி பட வெள்ளி விழாவில் கருணாநிதி பேசியதாவது,
ரஜினியன் படங்கள் பெரும் வெற்றி பெற்று அதற்கு விழாக்கள் கொண்டாடுகிற போதெல்லாம் நான் தவறாமல் அந்த விழாக்களில் கலந்து கொள்கிற வாய்ப்பை பெறுகின்றேன்.
இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ரஜினி ரசிகர்களுக்கு இந்த வேண்டுகோள் உற்சாகமாக இருக்கும்.
அவரது படம் அடிக்கடி வெளிவந்தால் எவ்வளவு மகிழ்ச்சி, உற்சாகம் அடைவீர்கள் என்று எனக்கு தெரியும்.
முன்பெல்லாம் நான் ரஜினியை பார்க்கும் போது புதிய பட முயற்சி மேற்கொள்ளவில்லையா? அடுத்த படம் எப்போது? என்ன கதை என்று கேட்பதுண்டு. அப்போதெல்லாம் அவர் எப்படி பேசாமல் இருப்பதன் மூலமாக இன்றைக்கும் பல விஷயங்களை உணர்த்துகிறாரோ, அதைப் போலவே பேசாமல் இருந்து சிரித்துக் கொண்டு போய்விடுவார்.
இப்போது தான் எனக்கு புரிகிறது, கொடுத்தால் பிரமாண்டமான வெற்றிப்படமாக தருவது, சாதாரண படம், படங்கள் வந்தது அதில் ஒன்று இந்த படம் என்ற அளவில் இருக்க கூடாது என்று கருதுகின்றவர்.
ரஜினி பேசும்போது தனது வெற்றிகளுக்கான காரணத்தை, ரகசியத்தை வெளியிட்டார்.
கபிலருடைய தத்துவத்தை எடுத்துக் கூறி, ஆசைப்படு, அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலரை சேர்த்துக்கொள், பின் அந்த வெற்றியை நிறைவேற்றிக்கொண்டு அதில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடு என்றார்.
நான் அதை இப்போது புரிந்து கொண்டேன். நான் ஆசைப்பட வேண்டும். ஆசை நிறைவேற மற்றவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நினைத்ததை முடிக்க வேண்டும்.
உண்மை தான். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசையை துறந்திடு என்று அந்தக் காலத்திலே துறவிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திருவோடு இல்லாமல் எந்த துறவியும் இருந்ததில்லை. திருவோடு மீது அவர்களுக்கு ஆசை.
புத்தர் கூட ஆசையை துறந்து அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும் அவர் ஆசைப்பட்டார். ஆசைப்படாதீர்கள் என்ற கருத்தை கூறி மக்களை திருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுவும் ஒரு ஆசை தான். அதுபோலத் தான் ரஜினி நல்ல படங்களை தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்u