For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மதுபான ஆலைகளுக்கு ரகசிய லைசென்ஸ் - அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News


திண்டிவனம்: மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பாமக கோரி வரும் நிலையில், திமுக அரசு மிகவும் ரகசியமாக 2 மதுபான ஆலைகளுக்கு லைசன்ஸ் வழங்கியுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் திமுக அரசு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக மதுபான தொழிற்சாலை அமைக்க உரிமங்களை வாரி வழங்கி வருகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு எதுவும் செய்தித் தாள்களில் வருவதில்லை.

மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் தமிழக அரசோ தற்போது புதிதாக 2 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள 6 மதுபான தொழிற்சாலைகளின் மூலம் 27.5 லட்சம் பெட்டிகள் மதுபான வகைகள் தயார் செய்யப்படுகிறது.

புதிதாக 2 மதுபான தொழிற்சாலைகளுக்கு ரகசியமாக தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் மொத்தம் மதுபான தயாரிப்பு 35 லட்சம் பெட்டிகளாக அதிகரிக்க உள்ளது. மேலும் தமிழகம் இனி மதுவில் மிதக்கும் நிலையும் உருவாகும்

தமிழக அரசின் இந்த செயல் எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுபானத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழகம் முழுவதும் எடுத்துக் கூறி, அனைத்து மதுக் கடைகளையும் படிப்படியாக மூடக் கோரியும் போராட்டம் நடத்த உள்ளோம்.

பாமகவினர் மிரட்டப்படுகிறார்கள்:

அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள பாமக ஆதரவாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போடுகிறார்கள். குற்றவாளிகளை தூண்டிவிட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

கடந்த வருடம் அங்கு நடந்த பாமக இளைஞர்கள் மாநாட்டில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டுக்கு நிதி கேட்டு மிரட்டியதாக இப்போது பாக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்யும் முயற்சியும் நடக்கிறது.

யாரை மிரட்டினார் என்கிறார்களோ அந்த நபர் புகார் கொடுக்கவில்லை. அரசு பொறியாளர் புகார் கொடுக்கிறார். அவர் ஆண்டிமடம் எம்.எல்.ஏ.யின் உறவினர். பாமக பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், நகர செயலாளர் தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்னியர் சங்கத் தலைவர் குரு மீதும் வழக்கு போட முயற்சி நடக்கிறது. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்று வெளியாருக்கு தெரிய வழியில்லை. ஆனால் குரு இன்னதான் பேசினார் என்று வழக்கை ஜோடிக்க பார்க்கிறார்கள். கட்சித் தலைவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. பேச்சு ஒட்டுக் கேட்கப்படுகிறது.

பாமகவினர் யாரும் உருவ பொம்மை எரிப்பு போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறியுள்ளேன். அதை மீறுவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து வரும் 21ம் தேதி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொல்லை படலம் குறித்து புதுச்சேரியில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் ராமதாஸ்.

மதுவை ஒழிப்பது குறித்து கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை நடத்தவிருப்பதாக டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X