விஜய்காந்த் மீது சரத் மறைமுக தாக்குதல்
சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் குறிக்கோள் அம்பு அல்ல, அது செல்லும் இலக்குதான் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மலேசியாவில் படப்பிடிப்பின்போது காலில் அடிபட்டு சென்னை திரும்பிய சரத்குமார் தனது இல்லத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது,
என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். அதனால்தான் நான் படித்த லயோலா கல்லூரி மூலம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர். காசு கொடுத்தால் யார் எப்படி வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பு வெளியிடலாம். (இந்த கருத்துக் கணிப்பில் விஜய்காந்த்தின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது)
மதுரையில் நடக்கவுள்ள எங்கள் கட்சி மாநாட்டை சிறப்பாக நடத்த அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள்.
கூட்டணி வேண்டாம் என்று ஆரம்பத்தில் சொன்ன விஜயகாந்த் இப்போது கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை. நாம் பல கூட்டணிகளை உடைக்கும் கட்சி. மற்ற கட்சிகளைப் போல ஒரு இடத்தில் வெற்றி பெறும் கட்சி அல்ல. (விருதாசலத்தில் மட்டும் விஜய்காந்த் கட்சி வென்றதை நினைவுகூர்க) தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் கட்சி.
மதுரையில் நடக்கும் நம் கட்சி மாநாட்டில் 50 லட்சம் பேர் திரள்வார்கள். நம் கட்சியில் நிர்வாகிகள் பதவி எந்த நேரத்திலும் மாறலாம். எனவே, கட்சிப் பணிகளில் தொண்டர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.
2011ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. நமது குறிக்கோள் அம்பு அல்ல. அது செல்லும் இலக்குதான்.
அருகில் இருந்து சீண்டுவோரை கண்டுகொள்ளக் கூடாது. எனவே நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். அப்போதுதான் நம் குறிக்கோள் நிறைவேறும் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications