ஆசிரியர் அடித்ததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த மாணவர்
நெல்லை: புத்தகம் கொண்டு வராததால் ஆசிரியர் தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டதால், தன்னை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்த முருகனின் மகன் ஆனந்த் (13). இவன் மேலப்பாளையத்தில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். முருகன் பாஜக பிரமுகராவார்.
2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற ஆனந்த புத்தகம் கொண்டு செல்லாததால், ஆரிசியர் மாணிக்கராஜ் ஆனந்தை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் நிலைதடுமாறிய அவன் ஜன்னலில் மோதி கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த ஆனந்தை பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, பின்னர் பள்ளி வேனில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் பெற்றோரிடம் ஆனந்த், ஆசிரியர் அடித்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தான். இதுகுறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு அவன் விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் மாணவர் ஆனந்த் தன் பெற்றோருடன் சென்று நெல்லை மாநகர கமிஷனர் மஞ்சுநாதாவை சந்தித்து தன்னை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு கொடுத்தான். இது தொடர்பாக விசாரணை நடத்த மேலப்பாளையம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கண்டித்த ஆசிரியர் மீது மாணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications