இளைஞர்களைக் காக்க தேமுதிகவின் புது அணுகுமுறை!
சென்னை: இளைஞர்களை வன்முறையாளர்களாக மாற்றி அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தடுக்க தேமுதிக புதிய அணுகுமுறையை கையாள உள்ளதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகள் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறையாளர்களாக மாற்றி போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அணுகுமுறையை தேமுதிக கொண்டுள்ளது. மக்களுக்கு இடையூறாக உள்ள எந்த போராட்டத்தையும் ஆதரிப்பதில்லை என்பது எங்கள் கொள்கை முடிவாகும்.
தமிழகத்தில் எந்த இடத்தில், எந்த இனத்தில் பிறந்தாலும் எல்லோருக்கும் கல்வியிலும், வேலையிலும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போது தான் அம்பேத்கர், அப்துல் கலாம் போன்றவர்கள் கிடைப்பார்கள்.
இன்றைய சமுதாய அமைப்பில் சமவாய்ப்பும், சமநீதியும் இல்லை. இந்த பேதங்களை களைவதே இளைஞர்கள் முன் உள்ள சவாலாகும் என்றார்.