பாலமேடு ஜல்லிக்கட்டில் 5 பார்வையாளர்கள் காயம்-நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று அலங்காநல்லூரையடுத்துள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் பாய்ந்து தாக்கியதில் 5 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.
அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளது. அதை ஒட்டிய கிராமமான பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 600 காளைகள் பங்கேற்றன.
தமிழகத்தில் பொங்கலையொட்டி சுமார் 500 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் போன்றவை முக்கியமானவை.
சிராவயலில் ஏற்கனவே தடையை மீறி ஜல்லிகட்டு நடத்தப்பட்டுவிட்ட நிலையில் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி பாலமேடு மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையொட்டி அலங்காநல்லூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நேற்று சாதகமான தீர்ப்பு வெளிவந்தவுடன் அப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பொங்கலை கருப்பு தினமாக அனுஷ்டித்தவர்கள், வேக வேகமாக ஏற்பாடு செய்து புத்தாடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை மாலையில் கொண்டாடினர்.
ஜல்லிக்கட்டுக்கான பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன. பார்வையாளர்கள் அமர சவுக்கு கட்டைகளைக் கொண்டு கேலரி அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற பாலமேட்டிற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து 600 காளைகள் அவசர அவரமாக நேற்று இரவு கொண்டு வந்து சேர்க்கப்பட்டன.
இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. வரிசையாக காளைகள் களத்தில் பாய அவற்றை அடக்க இளைஞர்கள் குதித்தனர். சுமார் 500 வாலிபர்கள் இந்த ஏறு தழுவுதலில் பங்கேற்றனர். இவர்கள் யாரும் காயமடையவில்லை.
ஆனால், பார்வையாளர்கள் பக்கமாக காளைகள் பாய்ந்து தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதுதவிர ப்ளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர்கள் பூர்ணிமா, பிராணிகள் நல வாரிய அதிகாரிகள் ஆகியோரும் போட்டியை கண்காணித்தனர்.
ஜல்லிக்கட்டைக் காண ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வந்திருந்தனர்.
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க காசு, சைக்கிள், கலர் டிவி, வெள்ளிக்குத்து விளக்கு என ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று மைதானத்தில் நின்று விளையாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் கிடைக்கவுள்ளன.
ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர் மர்ம சாவு:
இதற்கிடையே பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்த பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் தனியார் நிறுவனத்தில் செக்ரியூட்டியாக வேலை பார்ப்பவர் என போலீசார் தெரிவித்தனர். எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications