காஸ் விலை உயர்வு: சென்னையில் டீ கடைகள் ஸ்டிரைக்

சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கம் இந்த ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஸ்டிரைக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான டீ கடைகளை கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக் குறித்து சங்கத் தலைவர் தாமோதரன் கூறுகையில், வர்த்தக ரீதியிலான சிலிண்டர்களுக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். கடந்த 6 மாதங்களில் வர்த்தக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 840க்கு விற்ற சிலிண்டர் தற்போது ரூ. 1160 ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தக சிலிண்டர்களின் விலையை கடுமையாக உயர்த்தி, வீடுகளுக்கான சிலிண்டர்களின் விலையை தொடர்ந்து மானிய விலைக்கே விற்க எண்ணை நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என்றார் அவர்.
ஆனால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைத்தான் பிளாக் மார்க்கெட்டில் வாங்கி டீக் கடைகள் பயன்படுத்துகின்றனவே என்ற கேள்விக்கு தாமோதரன் பதிலளிக்கையில், 3 மாதங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தற்போது அப்படி யாரும் செய்வதில்லை.
சென்னை நகரில் 15 ஆயிரம் டீ கடைகள் உள்ளன. இதில் 60 சதவீத கடைகளின் உரிமையாளர்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களைத்தான் பயன்படுத்துகின்றனர் என்றார்.
ஆனால் தாமோதரன் சொல்வதில் சிறிதளவே உண்மை உள்ளது என்பதை டீக் கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைப் பார்த்தாலே புரியும். வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் அளவு 19 கிலோ ஆகும். ஆனால் பெரும்பாலான கடைகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் அளவு 14.2 கிலோ ஆகும். டீ கடைகளில் இந்த சிலிண்டர்களைத்தான் அதிகம் காண முடியும்.
டீ கடைகள் என்றில்லாமல் ஹோட்டல்களிலும் கூட வீடுகளுக்கான சிலிண்டர்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக சென்னை நகரில் சிலிண்டருக்குப் பதிவு செய்தால் குறைந்தது 10 நாட்களாவது காத்திருக்க வேண்டியுள்ளது












Click it and Unblock the Notifications