பெனாசிர் கொலைக்கு அல் கொய்தா, மசூத் காரணம்: சிஐஏ
வாஷிங்டன்: பெனாசிர் படுகொலைக்கு அல் கொய்தா அமைப்பும், தலிபான் கமாண்டர் பைதுல்லா மசூத்தும் காரணம் என அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கும், சர்வதேச தீவிரவாதிகளுக்கும் இடையே உள்ள நெருக்கம், பாகிஸ்தானுக்கு பேராபத்தாக முடியும் எனவும் அது எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள், சர்வதேச தீவிரவாதிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதுதான், பாகிஸ்தானில் சமீப காலமாக நடந்து வரும் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் என்றும் சிஐஏ கூறியுள்ளது.
பெனாசிர் கொலை தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் குழுவினர் பாகிஸ்தானில் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சிஐஏவின் இந்த கூற்று புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெனாசிர் கொலை தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு சிஐஏ இயக்குநர் மைக்கோல் ஹெய்டன் அளித்த பேட்டியில், பைதுல்லா மசூத் மற்றும் அவரது கும்பல்தான் பெனாசிர் கொலையைத் திட்டமிட்டனர். அல் கொய்தா அவர்களுடன் சேர்ந்து கொண்டது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
தலிபான் தீவிரவாதிகள் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தனர். தற்போது சர்வதேச பயங்கரவாதிகளுடன் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பலமடைந்துள்ளனர். அல் கொய்தா மற்றும் பல்வேறு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தலிபானுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கும் பேராபத்தாக முடியும்.
அல் கொய்தாவுக்கும், பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலையுடன் உள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை அவர்களது சாம்ராஜ்யமாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து இரு நாடுகளையும் நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
இந்த இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கும் கூட இதனால் ஆபத்து நேரிடலாம். இருப்பினும் தற்போது அங்கு நிலவும் சூழ்நிைல பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க போரில் பாகிஸ்தானை விட சிறந்த பங்குதாரர் இருக்க முடியாது. கடந்த சில வாரங்களாக அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள், அமெரிக்க, பாகிஸ்தான் நெருக்கத்ைத மேலும் அதிகரித்துள்ளன. முன்பை விட மேலும் தீவிரமாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட அவை வழி வகுத்துள்ளன.
இருப்பினும் தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்பது என்பது மிகவும் கடினமானது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது என்றார் ஹெய்டன்.