சென்னையில் 7 இடங்களுக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 7 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கப் போவதாக அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பெயரில் பிரபல வணிக வளாக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை, மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக அலுவலகமான சிட்டி சென்டரின் நிர்வாக அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.
அதில், சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், அப்பல்லோ மருத்துவமனை, தி.நகர் நியூ சரவணா ஸ்டோர், மயிலாப்பூர் சிட்டி சென்டர், வடபழனி முருகன் கோவில் மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் வரும் 21ம் தேதிக்குள் மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த அல்-கொய்தா இயக்கம் முடிவு செய்துள்ளது எனவும், இந்த கடிதத்தின் நகலை டிஜிபியிடம் கொடுக்கவும் என எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிட்டி சென்டர் நிர்வாகத்தினர் மைலாப்பூர் காவல் நிலையத்தில் அந்த மர்ம கடிதத்தை ஒப்படைத்தனர்.
இந்த கடிதத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற மர்ம மிரட்டல் கடிதம் மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை நடத்தினர்.
மைலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் போட்டி காரணமாக இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட 7 இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications