காங்கிரஸுக்கு 6 அமைச்சர்கள் - சபாநாயகர் பதவி தர திமுக முடிவு?
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படவுள்ளதாகவும், பீட்டர் அல்போன்ஸ் புதிய சபாநாயகர் ஆக்கப்படுவார் எனவும் தமிழகம் முழுவதும் பேச்சு எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 6 அமைச்சர் பதவியைக் கொடுக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் சிறுபான்மை பலத்துடன் கூடிய திமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம் என பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி விட்டன.
ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் ஆட்சியில் பங்கு கேட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் அவ்வப்போது கோரிக்கைகளை வைத்து வந்தனர். கட்சி மேலிடத்தையும் நெருக்கி வந்தனர்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை ஏற்காமல் ஆறப் போட்டு வருகிறது காங்கிரஸ் மேலிடம்.
இந்த நிலையில், சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேச ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் தயவு இல்லாமல் திமுகவால் ஆட்சியில் நீடிக்க முடியாது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் புதிய பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 6 அமைச்சர் பதவியைக் கொடுக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார். மேலும், சபாநாயகர் பதவியும் காங்கிரஸுக்கு வழங்கப்படவுள்ளது. அப்பொறுப்பில், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ நியமிக்கப்படவுள்ளதாக அந்த பரபரப்பு பேச்சு கூறுகிறது.
இந்த பரபரப்பான தகவல் தென் மாவட்டங்களில்தான் பலமாக உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினரிடையே பரபரப்பு நிலவுகிறது.