எல்லாவற்றிலும் பிரச்சினை செய்யும் கேரளா - துரைமுருகன் பாய்ச்சல்
கோவை: தமிழகம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் கேரள அரசு தேவையில்லாமல் வீண் பிடிவாதம் பிடித்து, பிரச்சினை செய்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தைப் பொறுத்தவரை, கேரள அரசு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பி.ஏ.பி) ஒப்பந்தப்படி கேரள எல்லையில் இடைமலையாறு கட்டப்பட்டால் தமிழக எல்லைக்குள் ஆனைமலையாறு, நல்லாறு கட்டிக்கொள்ளலாம், நல்லாற்றில் இரண்டரை டி.எம்.சி தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம் என ஷரத்து உள்ளது.
ஆனால் எல்லாவற்றையும் போல, இந்த விஷயத்திலும் கேரள அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பங்கு நிதி, குளங்களை தூர் வார ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை வைத்துக் கொண்டு மாநகர எல்லைக்குள் உள்ள 7 குளங்களையும் தூர் வாரி சீர்படுத்த கோவை மாநகராட்சி அனுமதி கேட்கிறது. ஆனால் குளங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துடன் தூர் வாரி சீரமைக்கும் திறமை படைத்த என்ஜீனியர்கள் பொதுப்பணித்துறையில் உள்ளனர். எனவே குளங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடியாது.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியை அவர்கள் எங்களிடம் கொடுத்தால் குளங்களை தூர் வாரி சீரமைத்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications