ரேஷன் கடைகளில் நாளை முதல் சிமென்ட் விற்பனை
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரூ.200க்கு சிமென்ட் மூடைகளை விற்பனை செய்வது நாளை முதல் தொடங்குகிறது.
சிமென்ட் பற்றாக்குறை மற்றும் கடும் விலை உயர்வினால் தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்கள், மூடை ரூ. 200க்கு என்ற வகையில் மாதந்தோறும் 20 லட்சம் மூடை சிமென்ட்டை தமிழக அரசுக்கு தருவதாக அறிவித்தனர்.
இந்த சிமென்ட்டை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு இந்த சிமென்ட் விற்பனை செய்யப்படும்.
நாளை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி 1,000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் குறைந்த நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சலுகை விலையில் அதிகபட்சமாக 100 மூட்டை சிமென்டை வழங்க அரசு உத்தரவிட்டது.
இந்த சிமென்ட்டை பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் அதற்கான அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது 01-07-2007ம் தேதிக்கு பின்னர் ஒப்புதல் பெறப்பட்ட கட்டட வரைபடத்தையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் இல்லாதவர்கள் அளிக்கும் மனுவை அந்தப் பகுதி வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் இதற்கான அறிவிப்புகளை ஆட்சியர்கள் வெளிட்டுள்ளனர்.
சிமென்ட் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தலைமையிட துணை தாசில்தாரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதி அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் மூட்டை 1க்கு ரூ.200 என்ற விலையில் சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம்.
சிமென்ட் பெறுவதற்கான கட்டணத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற பெயரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஏதேனும் ஒந்றில் வரைவுக் காசோலை (டிடி) மூலம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.