பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 11 பேருக்கு ஆயுள்

மும்பை: குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாக கற்பழித்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை படுகொலை செய்த பரபரப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. முஸ்லீம்கள் குறி வைத்து கொன்று குவிக்கப்பட்டனர்.
அதில் ஒரு கொடூர சம்பவமாக, தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை பெரும் கும்பல் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தது. பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதவிர பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் வெறிக் கும்பலின் கொடூர கற்பழிப்புக்கு ஆளானார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த வழக்கு குஜராத்தில் முதலில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் விசாரணையில் நியாயம் கிடைக்காது. எனவே வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி பானுவின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு பானு வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு நீதிபதி யு.டி. சால்வி தண்டனை விவரத்தை அறிவித்தார்.
கொடூரமாக கற்பழித்தது, கொலை ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
12வது குற்றவாளியான சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications