நான் தான் உண்மையான 'புரட்சித் தலைவி'-மாயாவதி
டெல்லி: இந்தியாவிலேயே நான் தான் உண்மையான பெண் அரசியல் தலைவி. மற்ற பெண் அரசியல்வாதிகள் எல்லாம் வெறும் வாரிசுகள் தான் என உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவியுமான மாயாவதி தனது சுய சரிதையில் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தனது 52வது பிறந்த நாளையொட்டி இந்த புத்தகத்தை மாயாவதி வெளியிட்டார். அதில் மாயாவதி கூறியிருப்பதாவது
இளம் வயதில் சமூகப் புரட்சிக்காக நான் பெரும் பாடுபட்டேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயர அயராமல் உழைத்து வருகிறேன். 21ம் நூற்றாண்டில் நானும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளோம்.
என்னை ஒழிக்க நினைத்த அரசியல் சக்திகளை முறியடித்துத் தான் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இப்போது இந்திய அரசியலில் உள்ள முக்கியமான பெண்கள் அனைவருமே வாரிசுகள் தான். தங்கள் குடும்பம் மூலமாக கிடைத்த அரசியல் சக்தியை அனுபவித்து வருபவர்கள் தான். இவர்களுடன் என்னைப் போன்ற புரட்சிவாதிகளை ஒப்பிடக் கூடாது.
சமூகப் புரட்சியில் ஈடுபட்டுள்ள நானும் அவர்களும் ஒன்றல்ல. நடுநிலை மனதோடு நான் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் சொல்வதன் நியாயம் புரியும். ஒடுக்கப்பட்ட மக்களை சமூகக் கேடுகள், துரோகங்களில் இருந்து விடுவிக்க நான் ஒரு வரலாற்றை எழுதி (படைத்து) வருகிறேன்.
காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி ஆகிய எல்லா கட்சிகளும் ஒன்று தான். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் நோக்கமோ சிந்தனையோ துளியும் கிடையாது. தலித் ஓட்டுக்கள் மீது மட்டுமே கண் வைத்துள்ள கட்சிகள் இவை.
நான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த காலத்திலும் கூட அக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ, அவர்களது அதிகாரத்துக்கு தலை வணங்கியதோ கிடையாது. அவர்களது ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைத்திருந்தேன் என்று கூறியுள்ள மாயாவதி தனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களை விலாவாரியாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications