சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது அவமதிப்பு வழக்கு
மதுரை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை பேரையூர் சுப்புலாபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட போலீஸ் எஸ்ஐக்கான பணித் தேர்வில் கலந்து கொண்டேன்.
உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் 72 மதிப் பெண்கள் பெற்ற தாழ்தப்பட்ட வகுப்பினர் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
நான், போதிய மதிப்பெண்கள் பெற்ற போதிலும் என்னை மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கவில்லை. எனவே என்னை மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க கோரி உத்திரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்னை மருத்துவ தேர்வுக்கு அழைக்க உத்திரவிட்டார். ஆனால் நீதிபதி உத்தரவுக்கு பின்னும் இதுவரை என்னை மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கவில்லை.
ஆனால் என்னுடன் நேர்காணல் தேர்வில் பங்கேற்ற பலருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
ஐகோர்ட் உத்திரவை சீருடை பணியாளார் தேர்வாணயம் மதிக்கவில்லை. எனக்கான பணி வாய்ப்பு பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே ஐகோர்ட் உத்திரவை மதிக்காத சீருடை பணியாளார் தேர்வாணய தலைவர் சுக்லா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தற்போதைய எஸ்ஐ பணியிடத்தில் ஒரு சீட் காலியாக வைக்க உத்திரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராம் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும் வரை ஒரு எஸ்ஐ பணியிடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.