திமுக அரசில் தவறு நடந்தால் போராட தயங்க மாட்டோம்-காங்.
தூத்துக்குடி: திமுக அரசில் தவறு நடந்தால் மக்களுக்காக போராட தயங்க மாட்டோம் என்று அகில இந்திய இளைஞர் ங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்கள், விவசாயிகள், நலிவடைந்த சமுதாயத்தினரின் வாழ்க்கை வளமாக தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்.
மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தது பத்திரிக்கை விளம்பரத்திற்காக என்றால் பரவாயில்லை. அதை விடுத்து வேறு ஏதாவது உள்நோக்கத்தோடு ஜெயலலிதா மோடியை அழைத்திருந்தால் இந்தியாவின் இறையாண்மை கெட்டு விடும்.
காமராஜர், பெரியார் போன்றோர் உருவான இந்த தமிழகத்தில் ஜெயலலிதாவின் இந்த போக்கிற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் ஏதாவது தவறுகள் நடந்தால் மக்கள் பிரச்சனைக்காக காங்கிரஸ் போராடவும், அரசிடம் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கியது இல்லை என்றார் அசோக் தன்வர்.