தைரியமா சிக்கன்-முட்டை சாப்பிடுங்க: அமைச்சர் எம்ஆர்கே
சென்னை: தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பற்றி யாரும் பயப்பட தேவையில்லை. எல்லோரும் தைரியமாக சிக்கன், முட்டையை சாப்பிடலாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் 3 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு லட்சக்கணக்கான கோழிகளை அம்மாநில அரசு அழித்து வருகிறது. இந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க அரசு அனைத்து முன்னச்செரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஆனாலும் மக்கள் கோழிக்கறி-முட்டை சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். இந் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது,
தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் கோழிப் பண்ணைகள் உள்ளன.
இங்கு 5,123 கோழி வளர்ப்பு பண்ணைகளும், 1,148 முட்டைக்கோழி வளர்ப்பு பண்ணைகளும் உள்ளன. முட்டை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது.
பறவைக் காய்ச்சலுக்கு இன்புளூன்சா என்ற வைரஸ் தான் முக்கிய காரணம். பறவையின் உமிழ்நீர், மலம் போன்றவற்றால் தான் இந்நோய் பரவுகிறது. கோழிகளை தாக்கும் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
கோழிப் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்துக்கு பறவைக் காய்ச்சல் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் இல்லை. நோய் பரவாமல் தடுக்க 29 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் தலைமையில் தலா 8 பேர் வீதம் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த குழு விரைந்து செயலாற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கோழிப்பண்ணைகளுக்கு சென்று தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பறவை காய்ச்சல், பாதிக்கப்பட்ட கோழி குறைந்த அளவில் முட்டையிடும். அதன் எடை குறைந்து, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் நீல நிறமாக மாறிவிடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை 48 மணி நேரத்தில் இறந்து விடும்.
இது மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ள அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கோ, கோழிகளுக்கோ இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் கோழிக்கறிகளை சமைத்து சாப்பிடலாம். யாரும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை.
கோழிக் கறியை நாம் அவிழ்த்து, ெபாறித்து பயன்படுத்துவதால், 70 சென்டிகிரேடு வெப்பத்தில் கிருமிகள் அனைத்தும் செத்துவிடும். அதனால் கோழிக்கறியை தாராளமாக சாப்பிடலாம்.
முட்டையை பொறுத்தவரை ஆஃப்பாயில், ஆம்லெட் தயார் செய்து சாப்பிடாமல் அவித்து சாப்பிடலாம். அவித்து சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனவே பொதுமக்கள் தயக்கமில்லாமல் கோழிக்கறி மற்றும் முட்டைகளை பயன்படுத்தலாம் என்றார்.