சென்னை விமான நிலைய விரிவாக்கம்: மக்கள் முற்றுகைப் போராட்டம்
சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தற்போது வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஓடுபாதையை விரிவுபடுத்த வேண்டும் என்றால் சுற்றி குடியிருப்பு பகுதிகளாக அமைந்து விட்டபடியால் அரசால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம், கோலப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் ஆகிய பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி அங்கு விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாழ்வுரிமை அமைப்பு சார்பாக அப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உட்பட 500 பேர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
விமான நிலைய விரிவாக்கம் குறித்த திட்டத்தை அரசு மறு பரீசலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான மனுவை அந்த அமைப்பின் தலைவர் பிருந்தா, மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ராவிடம் கொடுத்தார்.
இந்தத் திட்டத்தால், போரூர், மதனாந்தபுரம், முகலிவாக்கம், மெளலிவாக்கம், பனிச்சேரி, கோவூர், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர், கெளல் பஜார், மணப்பாக்கம் பகுதிகளில் மக்கள் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications