ஹிண்ட்ராப் நிர்வாகிகள் ஐவர் சிறையில் உண்ணாவிரதம்
கோலாலம்பூர்: மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஐந்து தமிழர் தலைவர்களும் கடந்த ஆண்டு இறுதியில், மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளது, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் விசாரணையே இல்லாமல் காலவரையின்றி சிறையில் அடைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்தும், விசாரணையை விரைவில் தொடங்கக் கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதயக்குமார், கணபதி ராவ், வசந்தகுமார், கங்காதரன், மனோகரன் ஆகிய ஐந்து தலைவர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். செலாங்கூர் மாகாணத்தில் உள்ள போர்ட் கிளாங் என்ற இடத்தில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இதேபோல பினாங்கில் உள்ள ஒரு இந்துக் கோவிலிலும் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications