பிப்ரவரி 1 வரை சட்டசபை கூட்டத் தொடர்
சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
ஆளுநரின் உரை முடிந்தவுடன் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம், பாமக சார்பில் ஜி.கே. மணி, காங்கிரஸ் சார்பில் சுதர்சனமும், தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் கூட்டத் தொடரை பிப்ரவரி 1ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், இந்த கூட்டத்தொடரில் திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பது உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன என்றார்.
கடந்த கூட்டத்தொடரில் சபை காவலரின் தொப்பியை சபாநாயகர் மீது வீசிய அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பற்றியும், ஜெயலலிதா மீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து வந்த சம்மன் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சபாநாயகரிடம் கேட்டபோது,
கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடியாது. நீதிமன்ற உத்தரவு சபை நடவடிக்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. ஜெயலலிதா மீதான உரிமைப்பிரச்சினை குறித்த சம்மன் தொடர்பாக உரிமைக்குழுதான் முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications