வட சென்னை புறக்கணிக்கப்படுகிறது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சென்னை: பல வகையில் வட சென்னை புறக்கணிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
வட சென்னையில் அக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் வரதராஜன் பேசியதாவது,
வியாசர்பாடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் முளைத்து விட்டன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வழியை தினமும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்குள்ள பாலத்தை கடப்பதற்கு பல மணி நேரத்தை மக்கள் செலவிட வேண்டியிருக்கிறது.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். லேசாக மழை பெய்துவிட்டாலே இந்தப் பகுதியில் இடுப்பு வரை மழை நீர் தேங்குகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக 10 மேம்பாலங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் 9 பாலங்கள், கட்டி முடிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அவை எல்லாமே தென் சென்னை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் தான்.
இங்கே (வடசென்னை) அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஒரே பாலம் மட்டும் 10 வருடம் ஆகியும் வேலை முடியாமல் அப்படியே நிற்கிறது.
பாலம் விஷயத்தில் மட்டுமல்ல. வட சென்னை பலவகையிலும் புறக்கணிக்கப்படுகிறது. தென் சென்னை பகுதிகளுக்கு புத்தம் புதிய பேருந்துகள் விடப்படுகின்றன. ஆனால் வட சென்னையில் பழைய பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் என எல்லாவற்றிலும் வட சென்னை புறக்கணிக்கப்படுகிறது. இங்குள்ள பள்ளிகளின் நிலையும் மோசமாகவே உள்ளது.
தென் சென்னை மட்டும் வளர்கிறது. உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் வடசென்னை தேய்கிறது. இது ஆரோக்கியமான நிலைமை இல்லை என்றார் வரதராஜன்.