பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்போம்: ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரபாகரனை உயிருடன் பிடித்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்போம்.
அதற்கு முன்பாக இலங்கையில் அவர் மீது உள்ள வழக்குகளில் அவர் விசாரிக்கப்படுவார். அதன் பிறகு இந்தியாவிடம் அவரை ஒப்படைப்போம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்க எந்தவித தடையும் எங்களுக்கு இல்லை. இருப்பினும் இப்போது அதை செய்ய நாங்கள் விரும்பவில்லை.
விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களை அனுப்புவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இது இந்தியாவுக்குப் பொருந்தாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிகவும் பயங்கரமான இயக்கமாக அமெரிக்க எப்.பி.ஐ. அமைப்பு அறிவித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் ராஜபக்சே.
இலங்கையில் பாக். குழு:
இதற்கிடையே, ஆயுத பேரம் தொடரபாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கொண்ட குழு 2வது முறையாக கொழும்பு வந்துள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இலங்கைக்கு ஆயுதங்களைத் தர இந்தியா மறுத்து வருவதால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்க இலங்கை முயன்று வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு முறை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன், இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் 2வது முறையாக பாகிஸ்தான் குழு இலங்கை வந்துள்ளது.
பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை தலைவர் சையத் சபாஹத் ஹூசேன் தலைமையில் பாகிஸ்தான் குழு கொழும்பு வந்துள்ளது. இக்குழுவில் ஏற்றுமதி பிரிவு இயக்குநர் உஸ்மான் அலி பட்டி, பொது மேலாளர் அப்பாஸ் அலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், அதிபரின் தம்பியும், பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோதபயா ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லையாம். காரணம் பாகிஸ்தான் ஆயுதங்களுக்கான விலை, சீனா வழங்கும் விலையை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கருதியதால் பேச்சுவார்த்தையில் பெரிய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை, பாகிஸ்தானின் மிகப் பெரிய ஆயுத உற்பத்தி கேந்திரமாகும். இந்த நிறுவனத்திற்கு மொத்தம் 14 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியை குறிக்கோளாகக் கொண்டு இங்கு ஆயுதத் தயாரிப்பு நடைபெறுகிறது.
வெடிபொருட்கள், டேங்குகள், விமான வெடிபொருட்கள், விமான எதிர்ப்பு குண்டுகள், ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications