கூடன்குளம் அருகே மீனவர் வெட்டிக் கொலை, கடும் பதட்டம்
வள்ளியூர்: கூடன்குளம் அருகே மீனவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை தொடர்ந்து கூத்தான்குளி மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள கூத்தான்குளி மேலத் தெருவை சேர்ந்த ஜெசு அருளப்பன் மகன் ரீகன். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த காந்தி மகன் கணேசன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கூத்தன்குளியில் கடந்த வாரம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. பின்னர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கணேசன் தரப்பினருக்கும், ரீகன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் நடந்தது.
இது தொடர்பாக கூடன்குளம் போலீசார் இரு தரப்பினரும் மீதும் வழக்குப் பதிவு செய்து, ரீகன் உள்பட சிலர் தினந்தோறும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்திட நிபந்தனை விதித்தனர்.
அதன்படி நேற்று மாலை ரீகன் மற்றும் அவரது நண்பர்கள் கனிஸ்டன், எல்டன் ஆகிய 3 பேரும் கூடங்குளம் காவல் நிலையம் வந்து கையெழுத்து போட்டு விட்டு டிராக்டரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த டிராக்டரில் இவர்களை தவிர மேலும் சில பயணிகள் இருந்தனர்.
விஜயாபதி என்ற இடத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளை காட்டி டிராக்டரை வழிமறித்து நிறுத்தியது.
10பேர் கொண்ட கும்பலை கண்டதும் ரீகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அப்போது ரீகன் தரப்பினர் மீது அந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஓட ஓட விரட்டி ரீகனை சுற்றி வளைத்து 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர், வள்ளியூர் டிஎஸ்பி ராஜகோபால், இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கூத்தான்குளி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
காற்றில் பறந்த மனுவால் போன உயிர்:
இதற்கிடையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை(21ம் தேதி) நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு கூத்தான்குளியை சேர்ந்த சிலர் வந்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூத்தான்குளியில் கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது. அங்கு அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அதிகாரிகள் இந்த மனுவை பரீசிலித்திருந்தால் கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று கூத்தான்குளியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் மக்கள் கொடுத்த மனுவை வழக்கம் போல் காற்றில் பறக்க விட்டதால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோய் விட்டது என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications