கடலில் கண்ணிவெடிகள்-இலங்கை கடற்படையின் அட்டூழியம்
சென்னை: தமிழக-இலங்கை கடற்பகுதியில் டெல்ட் தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன.
வழக்கமாக எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை கடற்படை வேலையா வைத்துள்ளது. அவ்வப்போது அவர்களை சுட்டுக் கொல்வதும் கைது செய்வதுமாக இலங்கையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் மீனவர்களை தடுக்க கடலில் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை செயலாளர் லீனா நாயர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படை நடுக்கடலில் புதைத்துள்ள கண்ணிவெடி பற்றி குறிப்பிட்டு, தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை மீன்வளத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கை கடற்படை கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக கூறும் டெல்ட் தீவு அருகே சென்று பார்வையிட்டுள்ளனர்.
மீனவர்களை மீட்க நடவடிக்கை:
இதற்கிடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 3 நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களிடையை பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்து அவர்களை மீட்பது குறித்து தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உட்பட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் இலங்கையில் உள்ள இந்திய துணைத்தூதரை தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களை மீட்பது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரையும், மத்திய அரசையும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் முதல்வரின் இந்த நடவடிக்கை உத்தரவை தொடர்ந்து வெகு விரைவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.