அரசுப் பேருந்துகளில் ஆங்கிலத்தை அழிக்க முயன்ற 22 பேர் கைது
சென்னை: அரசுப் பேருந்துகளில் ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை அழிக்க முயன்ற தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் உள்ள ஆங்கில எழுத்துகளைஅக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையில் வந்தவர்கள் தார்களைப் பூசி அழிக்க முயன்றனர்.
இந்திக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தடுத்தனர். மேலும் பயணிகள் சிலரும் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் திருமங்கலம் உதவி ஆணையர் அழகுசோலைமலை தலைமையில் போலீசார் விரைந்து வந்து பயணிகளை விரட்டியடித்து தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினரை மீட்டனர்.
பின்னர் அவர்களை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மொழிப்போர் தியாகிகள் தினம்:
இதற்கிடையே மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடக்கும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் பேசுகின்றனர்.
முன்னதாக இன்று காலை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன், தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விருகம்பாக்கத்தில் இருக்கும் மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.