சென்னையில் ரூ.150 கோடியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம்
திருச்சி: சென்னையில் ரூ. 150 கோடி செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பழந்தமிழ் இசை மரபுகள் மற்றும் பண்டைய இசை மரபுகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடந்து வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கை மத்திய அரசின் செம்மொழி தமிழ் ஆய்வு மையமும், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன.
இதில் இந்தியா தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர் டாக்டர் எம்.பி. பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம் தமிழகத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்கங்குகளை நடத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான இசை, தமிழ் இசை தான்.
தமிழ் செம்மொழியாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார் பரிதிமாற் கலைஞர். முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என சிலர் கேட்கலாம். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை செம்மொழி தமிழுக்காக கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறது, அந்த நிதியில் இருந்து தான் இதுபோன்ற பன்னாட்டு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் தொடக்க விழா நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மந்திரி அர்ஜுன் சிங்கிடம் மைசூரில் உள்ள மத்திய அரசின் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசு சென்னையில் இதற்காக சுமார் 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன் வந்தது. அந்த இடத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசு தமிழ் ஆய்வு மையத்திற்கான புதிய கட்டிடங்களை கட்டித் தரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.